ஓட்டுப் போட வராத கெஜ்ரிவால் அம்மா.. இறைவனை வேண்டிய அப்பா.. டெல்லி முதல்வரின் "சர்வாதிகாரம்" அஸ்திரம்
டெல்லி: சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று தனது குடும்பத்தோடு லோக்சபா தேர்தலையொட்டி வாக்களித்தார் கெஜ்ரிவால். அவருடன் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை கோவிந்த் ராம் கெஜ்ரிவால் உட்பட அவரது குடும்பத்தினர் சென்றனர்.

தாயார் உடல்நலக் காரணங்களால் ஓட்டுப்போட வரவில்லையாம். வாக்களித்த பிறகு பேட்டியளித்த கெஜ்ரிவால், கோடை வெயிலைத் தாங்கிக்கொண்டு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.
சர்வாதிகாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் சிரமப்படுகின்றனர், சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் ஓட்டுப்போடுகின்றனர், நானும் சர்வாதிகாரம், விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஓட்டுப்போட்டேன் என்றார் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவாலின் தந்தை கோவிந்த் ராம் கெஜ்ரிவால் வாக்களித்த பின்னர் அளித்த பேட்டியில், "எல்லாம் வல்ல இறைவனிடம் நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளோம். நம் எல்லோரையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி இறைவனை கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
டெல்லியில் பாஜகவுக்கும், காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் புது டெல்லி மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மியும், வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் சிறையிலிருந்து விடுபட்டு வெளியே உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் புதுடெல்லி தொகுதியில் வாக்களித்தனர். இந்தப் பகுதியில் பாஜகவின் பன்சூரி சுவராஜை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பார்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தினி சௌக் தொகுதியில், காங்கிரஸின் ஜே.பி. அகர்வால், பாஜகவின் பிரவீன் கண்டேல்வாலை எதிர்த்து போட்டியிடுகிறார்.
டெல்லியின் 7 தொகுதிகளில் எந்த கட்சி அதிகம் வெல்கிறதோ அவர்கள்தான் மத்தியில் ஆட்சியை பிடிப்பது வரலாறு. கெஜ்ரிவால் கைதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அனுதாப அலை அவர் ஆளும் டெல்லியில் எதிரொலித்து பாஜகவுக்கு எதிராக திரும்பினால் அது இந்தியாவின் ட்ரெண்ட் என்றே கருதப்படும். ஏனெனில் டெல்லி ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டி. இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து வகைப்பட்ட மக்களும் இங்கு வாழ்கிறார்கள்.












Click it and Unblock the Notifications