வேண்டும் என்றே இந்தியாவை சீண்டுகிறது பாகிஸ்தான்.. ஜேட்லி குற்றச்சாட்டு
அமிர்தசரஸ்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குவதும், போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் வகையில் நடந்து கொள்வதும் வேண்டும் என்றே நடந்து கொள்வது போலத் தெரிகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுவதையும், சுமூக உறவுடன் இரு நாடுகளும் திகழ்வதையும் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் அதிகார வர்க்கத்தில் பலரும் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய பாதுகாப்பு முகாம்களை நேற்று ஜேட்லி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார் ஜேட்லி.

பாகிஸ்தானுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை
ஜேட்லி கூறுகையில், வேண்டும் என்றே அவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். முன்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மட்டுமே எல்லை மீறினார்கள். இப்போது சர்வதேச எல்லையிலும் வாலாட்டுகிறார்கள். இந்தியாவை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதேயே இது காட்டுகிறது.

நல்லுறவை விரும்பவில்லை
பாகிஸ்தானிலும், அதன் அதிகார வர்க்கத்தினரும் இந்தியாவுடன் நல்லுறவு நீடிப்பதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.

வீரர்கள் தயார்
ஆனால் நமது வீரர்கள் எத்தகைய சூழலையும் சந்திக்கும் ஆயத்தத்தில் உள்ளனர். உரிய முறையில் அவர்கள் பதிலடி தருவார்கள் என்றார் ஜேட்லி.

வீரர்களுடன் பேச்சு
முன்னதாக வீரர்களுடன் கலந்துரையாடினார் ஜேட்லி. அவர்களது தீரமிகு பணியையும் பாராட்டினார். ஜேட்லியுடன் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் உள்ளிட்டோரும் போயிருந்தனர்.












Click it and Unblock the Notifications