கேரளாவுக்குப் போங்க.. சுத்திப் பாருங்க.. போட்டோ எடுங்க.. ரூ 5 லட்சம் பரிசு கிடைக்குமுங்க!
திருவனந்தபுரம்: கேரள சுற்றுலாத்துறை சர்வதேச புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெல்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படப் போட்டியில் உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களும் பங்கேற்கலாம். போட்டிக்கான கரு கேரளா என்பதாகும்.
நடுவர்களால் மிகச்சிறந்த புகைப்படங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவற்றிற்கு முறையே முதல்பரிசாக ரூ. 5 லட்சமும், இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாவது பரிசாக ரூ. 3 லட்சம் மற்றும் 2 லட்சமும் வழங்கப்படும். இது தவிர ஆறுதல் பரிசாக ஐந்து பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் தங்களது புகைப்படங்களை கேரள சுற்றுலாத்துறையின் www.keralatourism.org இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுற்றுலாத்துறை இயக்குநர் ஷேக் பரீத் கூறுகையில், ஆண்டுதோறும் கேரளாவுக்கு 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இதில் பலரும் புகைப்பட ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
முதன்முறையாக மிகப்பெரிய பரிசுத் தொகையுடன் இந்த புகைப்படப்போட்டி நடத்தப்படுவதாக கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் அனில்குமார் தெரிவித்துள்ளார்.
போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு தனிநபரும் மூன்று புகைப்படங்கள் வரை அனுப்பலாம். அப்புகைப்படங்கள் கடந்தாண்டு ஜனவரி முதல் இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவரின் சுய படைப்பாக இருக்க வேண்டும்.
புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் முதல் 3 ஆயிரத்திற்குட்பட்ட பிக்சல்களுக்குள் இருக்கவேண்டும்.
இந்தப் போட்டியின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை கேரளாவிற்கு கவர்வதே கேரள சுற்றுலாத்துறையின் நோக்கமாகும்.
மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இங்கே தொடர்பு கொள்ளலாம்...