ராஜ்தானி ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ராணுவ வீரர் கைது
கவுகாத்தி: ராஜ்தானி ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்ப்ருகர்-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. வகுப்பு பெட்டியில் தனது உறவினருடன் சுமார் 17 வயது இளம்பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அசாம் மாநிலத்திலுள்ள லும்டிங் - சப்பர்முக் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்தட்டுப் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணிடம், அதே பெட்டியில் பயணம் செய்த மற்றொரு பயணி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
பதறியெழுந்த இளம்பெண் போட்ட கூச்சலால் அப்பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் விழித்துக் கொண்டனர். சில்மிஷம் செய்த நபரை மடக்கிப் பிடித்த அவர்கள் கவுகாத்தி நிலைய ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபரின் பெயர் குல்விந்தர் சிங் என்பதும், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமையுணார்ச்சி கொண்ட ராணுவ வீரர் ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தது ரயில் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications