என்னது! ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டரா?.. எந்த மாநிலத்தில் தெரியுமா?
கவுகாத்தி: மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், பிளஸ் டூ மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் 15 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், ஒரு ஸ்கூட்டரும் இலவசமாக வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசுகள் செய்து வருகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம், கல்வி உதவி தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் அளிக்கப்பட்டு வருவதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால், நாட்டிலேயே முதல் முறையாக என்று சொல்லும் அளவுக்கு வடகிழக்கு மாநிலமான அசாமில் ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது அசாமில், பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸ் ஆன மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்க இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அசாமில் ஹிமந்த பிஸ்வ சர்மா முதல்வராக உள்ளார். நேற்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பனிகாந்த காகதி விருது திட்டத்தின் கீழ் 35,775 மாணவ மானவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, பிளஸ் 2 தேர்வில் 75 மதிப்பெண்கள் பெற்ற 5,566 மாணவர்கள் மற்றும் 60 சதவிகித மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 30,209 மாணவிகளுக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும். அதொடு ரூபாய் 15 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநில கல்வி வாரியம் நடத்திய தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை வரும் 30 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக அசாம் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அசாமில் அதிக மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,775 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.
இதற்கான நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி நடைபெறும். அது மட்டும் இன்றி எச்.எஸ்.எல்.சி தேர்வில் 75 சதவீதத்திற்கும் மேல் எடுத்த மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்" என்றார். அது போக பூடான் அரசுக்கு கூடுதலாக மூன்று எம்.பி.பிஎஸ் சீட் ஒதுக்கவும் கேபினட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications