மோசடி வழக்கில் வருங்கால கணவரை சிறையில் அடைத்த பெண் எஸ்ஐ கைது! அசாம் பெண் சிங்கத்துக்கு என்னாச்சு?
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் நிச்சயிக்கப்பட்ட நபரை போலீஸ் எஸ்ஐ ஜூன்மோனி ரபா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒப்பந்த பணிகள் பெற்று தருவதாக கூறி வருங்கால கணவரின் பணமோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ஜூன்மோனி ரபாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்டம் காளியபோர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜூன்மோனி ரபா. இவருக்கும் ராணா போகாக் என்பவருக்கும் 2021 அக்டோபர் மாதம் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்தது.
வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ராணா போகாக் ஒஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவரது நடத்தையில் சந்தேகம் எழுந்தது.

நிச்சயிக்கப்பட்ட நபரின் மோசடி
இதுபற்றி ஜூன்மோனி ரபா விசாரித்தார். இந்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அவர் ஒஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறியது பொய் என்பதும், அரசு வேலை வாங்கி தருவதாக அவர் பலரிடம் பணமோசடி செய்ததும் தெரியவந்தது. இதுபற்றி ஜூன்மோனி ரபாவிடம் புகாரும் வழங்கப்பட்டது.

கைது நடவடிக்கை
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஜூன்மோனி ரபா தனது வருங்கால கணவரை கடந்த மாதம் கைது செய்தார். அவரிடம் இருந்து போலியான முத்திரைகள் உள்பட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஏற்கனவே பிரம்மபுத்திரா ஆற்றில் சட்டவிரோதமாக படகு இயக்கிய வழக்கு விசாரணையில் இருந்து விலகும்படி பிபுரியா தொகுதி எம்எல்ஏ அமியா குமார் புயான் கூறியதற்கு ஜூன்மோனி ரபா மறுப்பு தெரிவித்த நிலையில், பணமோசடி செய்த வருங்கால கணவரை அவர் கைது செய்த சம்பவம் இன்னும் அவருக்கு கூடுதல் பெருமையை அளித்தது.

எஸ்ஐ மீதும் புகார்
இதற்கிடையே தான் ஜூன்மோனி ரபா மீதும் மோசடி புகார்கள் எழுந்தன. அதாவது நிச்சயம் செய்யப்பட்ட ராணா போகாக்குடன் சேர்ந்து ஜூன்மோனி ரபாவும் குற்றச்சதி மற்றும் ஏமாற்றி பணம் பறித்ததாக மஜூலி போலீசில் புகார்கள் பதிவாகின. இந்த புகார் தொடர்பாக ஜூன்மோனி ரபாவிடம் மஜூலி போலீசார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

2 நாள் விசாரணைக்கு பிறகு கைது
இந்த விசாரணையின்போது ஒஎன்ஜிசி நிறுவனத்தில் ஒப்பந்த பணிகள் பெற்று கொடுப்பதாக கூறி ஒப்பந்ததாரர்களான ராம் அபத்ரா சர்மா, அஜித் போரா ஆகியோரிடம் ஜூன்மோனி ரபா கூறியதும், இதையடுத்து இருவரும் பணத்தை ராணா போகாக்கிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜூன்மோனி ரபாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications