'டபுள் எஞ்சின் அரசு'.. அசைக்க முடியாது.. அசாமில் முழங்கிய பிரதமர் மோடி
அசாம்: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (மார்ச்.21) பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அசாம் மாநிலம் போககத்தில் (Bokakhat) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, "பாஜக அரசாங்கத்தை நீங்கள் தேர்வு செய்ததற்கான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் என இன்று அமர்ந்திருக்கும் நம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களிடம் நான் நிச்சயம் சொல்ல முடியும்.
இங்கு முக்கிய கோரிக்கையாக இருந்தது அசாமில் இருந்து காங்கிரஸ் கொள்ளையடிப்பதை எவ்வாறு தடுப்பது என்பதே. என்டிஏ தலைமையிலான ஆட்சி, அதனை தடுத்துள்ளது என்று நம்புகிறோம். அசாமில் பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும். அசாம் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ ஆட்சி நிச்சயம் அமையும். மக்கள் அந்த வாய்ப்பை வழங்குவார்கள்.
மத்தியிலும், மாநிலத்திலும் என்.டி.ஏ தலைமையிலான அரசாங்கம் இயங்கி வருகிறது. இந்த இரட்டை எஞ்சின் சக்தி அசாமை முன்னோக்கி கொண்டுச் செல்கிறது. நெடுஞ்சாலைகள் தீவிர முயற்சிகளால் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், மாநில அரசு அசாமை நாட்டுடனும், மத்திய அரசுடனும் இணைக்கிறது.
காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்ததை யார் மறக்க முடியும்?. அந்த நேரத்தில் புறக்கணிப்பும் இரட்டிப்பாக இருந்தது. அப்போது அசாம் மக்களின் குரலை, மாநில அரசோ, மத்திய அரசோ சுத்தமாக கேட்கவில்லை. ஆனால், எங்கள் என்டிஏ அரசு செவி சாய்த்தது.
கடந்த 5 ஆண்டுகளில், அசாமின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளோம். எங்கள் கூட்டணிக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாக்குகளும் அசாமின் விரைவான வளர்ச்சிக்கான வாக்குகளாகும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்கப்பட்ட வலிமை அசாமின் தன்னம்பிக்கையை உற்சாகப்படுத்தும். தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் ஒவ்வொரு வாக்குகளும் இங்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.