டெல்லியில் தொங்கு சட்டசபை: உரிமை கோர மாட்டோம் என்கிறது பாஜக
டெல்லி: டெல்லியில் எங்களுக்கு மெஜாரிட்டி பலம் இல்லை என்பதால் ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோர மாட்டோம்'' என்று பாரதீய ஜனதா கட்சி அறிவித்து உள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. டெல்லி சட்டசபையில் மொத்தம் 70 இடங்கள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
அதிகபட்சமாக பாரதீய ஜனதாவுக்கு 31 உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

தொங்கு சட்டசபை
பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான அகாலி தளத்துக்கு ஒரு உறுப்பினரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். ஒரு தொகுதியில் சுயேச்சை உறுப்பினர் வெற்றி பெற்றார். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது.
31 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அந்த கட்சிக்கு கூட்டணி கட்சியான அகாலிதளம் உறுப்பினர் ஒருவரின் ஆதரவும் கிடைக்கும். என்றாலும் ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

கேட்கமாட்டோம்
இந்த நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவது இல்லை என்று பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ வர்தன் அறிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஆட்சி அமைக்க தேவையான 36 உறுப்பினர்களின் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கு இல்லை என்பதால் நாங்கள் ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரப்போவது இல்லை என்றார். ஆனால் இனி என்ன நடக்கும் என்பது பற்றி தனக்கு இப்போது எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார். ஆம் ஆத்மி கட்சியை தாங்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
அதேசமயம் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்றும், இல்லையேல் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் தெரிவித்தார்.

ஆம் ஆத்மியின் நிலை
ஆக்கபூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்படப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்து உள்ளது. இதன்மூலம் அந்த கட்சி, ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
காங்கிரஸ் ஆதரவு அளித்தால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடியும். ஆனால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் கேள்விக்கே இடம் இல்லை என்று டெல்லி மாநில கட்சி பொறுப்பை கவனிக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறினார்.

கவர்னர் ஆட்சியா?
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவுக்கு, ஆட்சி அமைக்க வருமாறு டெல்லி கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுப்பார். அந்த கட்சி கவர்னரின் அழைப்பை ஏற்க மறுத்தால், அடுத்த பெரிய கட்சியான ஆம் ஆத்மிக்கு அவர் அழைப்பு விடுப்பார்.
அந்த கட்சியும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்றால் டெல்லியில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அரசியல் சட்ட நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications