ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
டெல்லி: ஜம்மு - காஷ்மீர், அரியான, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், நான்கு மாநில சட்டமன்றங்களுக்குக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 4 மாநில சட்டமன்ற தேர்தலையும் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நான்கு மாநில சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 2 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
ஹரியானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதியும், மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியும் முடிவுக்கு வருகிறது.
இதேபோல், ஜார்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 19 ஆம் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த நான்கு மாநிலங்களிலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு முதற்கட்டமாகவும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு அடுத்தகட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் டிசம்பர் மாதமும் அரியான, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அக்டோபர் மாதமும் வாக்கு பதிவு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
காஷ்மீரில் பனிக்காலம் தொடங்குவதாலும், ஜார்கண்டில் மழைக்காலம் வருவதாலும், அங்கு பாதுகாப்புப் படைகளை அனுப்புவது பற்றியும், தொடர்ச்சியாக வரும் பண்டிகைகள், மத்திய பாதுகாப்பு படைகளை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஹரியானா, மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications