சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பிய துஷ்யந்த் தவேதான் தகுதி நீக்க வழக்கில் தினகரனின் வக்கீல்!
டெல்லி: சசிகலா சிறை செல்லும் பணியை துரிதப்படுத்திய அதே மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேதான் இப்போது தினகரன் தரப்புக்காக ஹைகோர்ட்டில் ஆஜராகியுள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 1996ம் ஆண்டில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம்
இதையடுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 6ம் தேதி, இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

கர்நாடக தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே
இவ்வாறு துரிதமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும் முடிவுக்கு வர, கர்நாடக அரசு தரப்பின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கோரிக்கை ஒரு முக்கியமான காரணமாகும். சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தரப்புக்காக மூத்த வழக்கறிஞரான ஆச்சாரியாவுடன் இணைந்து வாதிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர்தான் துஷ்யந்த் தவே.

நினைவூட்டிய தவே
சுப்ரீம்கோர்ட் பெஞ்ச்சை பிப்ரவரி 6ம் தேதி அணுகினார் தவே. "சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தீர்ப்பு குறித்து நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று தவே நீதிபதிகள் பெஞ்சிடம் தெரிவித்தார். இவரது நினைவூட்டலுக்கு பிறகே, ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இந்த தீர்ப்பையடுத்து சசிகலா சிறை சென்றார்.

தினகரன் தரப்புக்காக தீவிர வாதம்
இந்த நிலையில், இப்போது தினகரன் தரப்பு இவரைத்தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஆஜராக அழைத்து வந்தது. அவரும் சென்னை ஹைகோர்ட்டில் இன்று அதிரடியாக பல்வேறு வாதங்களை எடுத்து வைத்தார். எடியூரப்பா வழக்கு தீர்ப்பு முதல் மத்திய அரசை குற்றம்சாட்டுவது வரை என இவரது வாதங்கள் சரவெடியாக இருந்தன. இதில் ஒரு வெற்றிதான், 18 எம்எல்ஏக்கள் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்க கூடாது என்று கூறுவதாகும்.












Click it and Unblock the Notifications