உச்சக்கட்ட பதற்றம்..ஆப்கன் மருத்துவமனையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. 19 பேர் பலி, பலர் படுகாயம்
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்கனில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஸ்ரப் கானி தலைமையிலான ஆப்கன் அரசைக் கவிழ்த்த தாலிபான்கள் தற்போது ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
முந்தைய ஆட்சியைப் போல இந்த முறை ஆப்கன் பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாக இருக்காது எனத் தாலிபான் அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், ஆப்கனில் ஆங்காங்கே பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ளது.

அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
அப்படி தான் இன்றைய தினம் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முதலில் மருத்துவமனை அருகே 2 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாகவும் அதன் பிறகு மருத்துவமனைக்கு உள்ளே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 பேர் பலி
மருத்துவமனையில் இருந்து இதுவரை 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் நகரில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பிற்குப் பிறகு பயங்கரவாதிகள் ஒவ்வொரு அறைக்கும் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யார் காரணம்
இதுவரை இந்த மோசமான தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்தத் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும் கூட, இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது. ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு மட்டும் தற்கொலைப் படைத் தாக்குதல் உட்பட மொத்தம் 4 தாக்குதல்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர்.

முதல்முறை இல்லை
ஆப்கனில் உள்ள இந்த ராணுவ மருத்துவமனையில் தாலிபான் வீரர்களுக்கும் சரி, முன்பு இருந்த அஸ்ரப் கானி அரசின் பாதுகாப்புப் படையில் இருந்த வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் யாரைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல இந்த மருத்துவமனையில் தாக்குதல் நடைபெறுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, கடந்த 2017இல் இதே மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். அதில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் பணிகள்
ஆப்கன் மருத்துவமனையில் 2 குண்டுகள் வெடித்துள்ளதைத் தாலிபான்களும் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அங்குத் தாலிபான் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனையைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேநேரம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் யார், அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதியாக வெளிவரவில்லை.

தாலிபான் அரசு
தாலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியதில் இருந்தே அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. முதலில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்த ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் ஆப்கனில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதைச் சமாளித்து அரசை நடத்துவதே தாலிபான்களுக்குப் போராட்டமாக உள்ளது.












Click it and Unblock the Notifications