சோனியா அளித்த இஃப்தார் விருந்தில் முலாயம் சிங் ஆப்சென்ட்: ஒரு வேளை...?
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த இஃப்தார் விருந்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் கலந்து கொண்டபோதிலும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொள்ளவில்லை.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் துவங்க ஒரு வாரம் உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இஃப்தார் விருந்து அளித்தார். அந்த விருந்தில் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ ப்ரையன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் சோனியாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
சோனியாவுக்கு அருகில் இருந்த டேபிளில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. கனிமொழி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் சரத் யாதவ், கே.சி. தியாகி உள்ளிட்டோர் இருந்தனர். சோனியா அளித்த இஃப்தார் விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திர சிங், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சதிஷ் சந்திர மிஸ்ரா, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முகமது சலிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருந்தில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் லாலு, முலாயம் மற்றும் காங்கிரஸ் இடையே பிரச்சனையாக இருக்குமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
வரவிருக்கும் பீகார் தேர்தலில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. ஆனால் இன்னும் தொகுதி பங்கீடு செய்யவில்லை.
இஃப்தார் விருந்தில் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, குமாரி செல்ஜா, அம்பிகா சோனி, மணி சங்கர் அய்யர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.