கந்தகாருக்கு தீவிரவாதிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்த பலவீனமான பிரதமர் வாஜ்பாய்: சாடும் காங்கிரஸ்
டெல்லி: வாஜ்பாயை முன்வைத்து நரேந்திர மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சி இப்போது நாட்டின் பலவீனமான ஒரே பிரதமர் வாஜ்பாய் என்று குற்றம்சாட்டி காரணங்களை பட்டியலிட்டுள்ளது.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பதற்காக, அக்கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து கருத்து வெளியிட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் பிரதமரின் ஊடக ஆலோசகர், நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஆகியோர் அடுத்தடுத்து புத்தகங்கள் எழுதி மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன்சிங் என்ற முத்திரையை குத்தி வருகின்றனர்.
இதனால் இப்போது நாட்டின் மிக பலவீனமான பிரதமரே வாஜ்பாய் என்று பதில் சொல்லி வருகிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஜா தமது ட்விட்டரில் நேற்று முதல் பலவீனமான பிரதமர் வாஜ்பாய் என்று கூறி அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டு வருகிறார்.
நவாஸுடன் நட்பு
கார்கில் போரில் இந்திய ராணுவப் படையினர் உயிரிழந்த பின்பும், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் வாஜ்பாய் கைகுலுக்கினார்.
இந்தியாவில் தங்கிய முஷாரஃப்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னை உச்சக்கட்டத்தில் இருந்த போதிலும், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முஷாரஃப் இந்தியாவில் தங்கினார்.
மோடியை நீக்காதது ஏன்?
2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து நீக்குவதில் வாஜ்பாய் தோல்வி அடைந்துவிட்டார்.
கந்தகார் விமான கடத்தல்
கந்தகார் விமானக் கடத்தலின் போது தீவிரவாதிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்து அவர்களே நாட்டின் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த வழிவகை செய்ததும் வாஜ்பாய்தான். ஆகையால்தான் அவர் பலவீனமான பிரதமர்..