இனி இரவு 8 மணிக்கு மேல் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வேண்டாம்- வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி: நாட்டில் ஏடிஎம் கொள்ளைகளைத் தவிர்க்கும் வகையில் இரவு 8 மணிக்கு மேல் பணம் நிரப்ப வேண்டாம் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் அன்றாடம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிரப்பப்படுகிறது. வங்கிகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் தனியார் வாகனங்கள் இந்த பணத்தை ஏற்றிச் சென்று, ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பி வருகின்றன.

இதுதவிர, மேற்படி பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் மறுநாள் காலை நிரப்புவதற்காக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை தங்களது பாதுகாப்பில் இருப்பு வைத்துக் கொள்கின்றன. இத்தகையை பணப் பரிவர்த்தனையின்போது பணம் ஏற்றிச் செல்லும் வேன்களை சிலர் வழிமறித்து கொள்ளையடிப்பது அதிகரித்து வருகின்றது. இதை தடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இனி நகர்ப்புறங்களில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களில் சென்று ஏ.டி.எம்.களில் பணம் போட கூடாது. புறநகர் பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேலும், நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மாலை மூன்று மணிக்கு பின்னரும் ஏ.டி.எம்.களில் போட பணத்தை கொண்டு செல்ல கூடாது.
ஐந்து லட்சம் வரை கொண்டு செல்லும் வாகனங்களில் துப்பாக்கிய ஏந்திய காவலர்கள், கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். போன்ற கருவிகள் கண்டிப்பாக பொருத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரேவேளையில் ஐந்து கோடி ரூபாய் அதிகமான தொகையை கொண்டு செல்ல கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications