பள்ளி மீது கல்வீசி தாக்குதல்... மதமாற்றம் செய்ததாக புகார்... மாணவர்கள், ஆசிரியர்கள் ஓட்டம்
விதிஷா : கல்வி கற்க வரும் மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
விதிஷா நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 மாணவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை அடுத்து இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போதே நடைபெற்ற இச்சம்பவத்திற்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மீது கல்வீசி தாக்குதல்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது விதிஷா பகுதி. இங்கு கிறித்துவ மெஷினரிக்கு சொந்தமான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று 12ம் வகுப்பு மாணவர்கள் கணிதத் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கும்பல் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர். பள்ளி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளியில் இருந்த கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன. இதனால் பள்ளிக்குள் கணிதத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவர்கள் அச்சம் அடைந்தனர். தொடர் தாக்குதலால் பள்ளி வளாகத்தில் பதற்றம் நிலவியது. இச்சம்பவத்தின் போது அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் சிறிது நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெற்றோர் குவிந்தனர்
உடனடியாக போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவத்தை கேள்விபட்ட சில பெற்றோரும் பள்ளிக்கு வரத் தொடங்கிவிட்டனர். தாக்குதல் நடத்தியது பஜ்ரங் தல் என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் பள்ளி மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் கட்டிடத்திற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது அந்தக் கூட்டத்தை போலீசார் கலைக்க முயன்றனர். தாக்குதல் நடைபெற்றதற்கு காரணம் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 8 பேர் கிறித்துவ மெஷினரியால் மதமாற்றம் செய்யப்பட்டதாக சில தினங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதற்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக் கூறி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பள்ளி மேலாளர் புகார்
இதுகுறித்து பள்ளி மேலாளர் தெரிவிக்கையில், பள்ளி மீது தாக்குதல் நடைபெறும் என சில ஊடகங்கள் மூலம் முன்னரே தெரியும் என்பதால் இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திருந்தும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் பள்ளியில் மத மாற்றம் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்த அவர், மத மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் யாரும் தங்கள் பள்ளியில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

கிறித்துவ பள்ளிகளுக்கு பாதுகாப்பு
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள மற்ற கிறித்துவ அமைப்பை சார்ந்த பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. சம்பவம் குறித்து கேள்விபட்ட மாவட்ட எஸ்பி தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications