பலாத்கார முயற்சி, மிரட்டல், மோசடி... இந்திய ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் மீது பரபரப்பு புகார்!
லூதியானா: இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்குப் பதிவாகியுள்ளது.
தனது நீண்ட நாள் காதலியையே பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக லூதியானாவில் சர்தார் சிங் மீது புகார் தரப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணும் கூட ஒரு ஹாக்கி வீராங்கனைதான். அவர் இந்திய வம்சவாளி இங்கிலாந்துப் பெண் ஆவார். 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது சர்தார் சிங்குடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அது பின்னர் காதலாக மாறியுள்ளது. சர்தார் சிங், அவரை மணந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். இருப்பினும் பின்னர் பின்வாங்கி விட்டார். மேலும் அவரை விட்டும் விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து லூதியானா போலீஸில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மன ரீதியான சித்திரவதை
என்னை விட்டு விலகிச் செல்ல முடிவெடுத்த சர்தார் சிங், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். மிரட்ட ஆரம்பித்தார்.

நொறுங்கிப் போய் விட்டேன்
முன்பு என்னை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் இப்போது என்னை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் காகிதம் போல பார்க்கிறார். நான் இதயம் நொறுங்கிப் போயுள்ளேன்.

பேசக் கூட மறுக்கிறார்
இந்நேரத்திற்கு எங்களுக்குத் திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நான் போன் செய்தால் பேசக் கூட மறுக்கிறார். கடந்த 3 மாதங்களாக என்னைப் புறக்கணித்து வருகிறார்.

மிகப் பெரிய தவறு
நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக சேர்ந்தே இருக்கிறோம். இப்போது எனக்கு அவர் துரோகம் செய்து விட்டார். அவர் ஹாக்கி குறித்து தீவிரமாக சிந்திக்கட்டும், செயல்படட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எனக்கு அவர் செய்தது மிகப் பெரிய தவறாகும்.

எல்லோரும் வேதனையில்
நடப்பது சரியில்லை. நானும் ஒருவருக்கு மகள், சகோதரி. எல்லோருமே எனது நிலையை நினைத்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.

நிச்சயம் கூட முடிந்து விட்டது
எங்களுக்குள் திருமண நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது. அப்போது சர்தாரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். எனது குடும்பத்தினர் வரவில்லை. ஆனால் அவர்களுக்கும் சம்மதம்தான்.

எல்லாமே பொய்
தனது வயது, ஜாதி உள்ளிட்ட அனைத்தும் குறித்து அவர் என்னிடம் சொன்னவை எல்லாமே பொய்தான். உடல் ரீதியாக என்னை பலவந்தப்படுத்தக் கூட அவர் முயற்சித்துள்ளார்.

டிஎஸ்பி என்று கூறி மிரட்டுகிறார்
நான் டிஎஸ்பி, இந்திய அணியின் கேப்டன். நீ வெளிநாட்டுக்காரி. உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் என்னை மிரட்டுகிறார் என்று தனது புகாரில் கூறியுள்ளார் அப்பெண்.

பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு
இந்தப் புகாரின் பேரில் லூதியானா போலீஸார் தற்போது பாலியல் பலாத்காரமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications