டெல்லியில் மர்ம மரணமடைந்த சரத் பிரபுவின் உடற்கூறு பரிசோதனை நிறைவு
டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த சரத் பிரபுவின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
Recommended Video

டெல்லி: டெல்லியில் உள்ள யூசிஎம்எஸ் கல்லூரியில் மர்மமான முறையில் இறந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்தது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு. இவர் டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி எம்.எஸ். படித்து வந்தார்.

கல்லூரிக்கு பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்த அவர் நேற்று காலை அறையில் சடலமாக காணப்பட்டார். இதையடுத்து அந்த அறைக்கு வந்த சக மாணவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து சரத்பிரபுவின் உடலை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர் இன்சுலினை தனக்கு தானே செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் அவரது தலையில் ரத்த காயம் உள்ளது. இதனால் தற்கொலைக்கு வாய்ப்பில்லை என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அவருடன் தங்கியிருந்த தமிழக மாணவர்கள் இருவரிடம் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாணவன் சரத்பிரபுவின் உடலுக்கு இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மூத்த மருத்துவர் வர்மா தலைமையிலான மருத்துவர்கள் தொடங்கிய உடற்கூறு பரிசோதனை ஒன்றரை மணி நேரமாக நடைபெற்று தற்போது முடிவடைந்தது. அந்த சோதனை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.
சரத்பிரபுவின் உடலை பதப்படுத்துவதற்காக ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடற்கூறு சோதனை முடிவடைந்த நிலையில் சரத்பிரபுவின் உடல் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொல்லப்பட்டாரா என்பது தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications