அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது.. ஒப்புக்கொண்டபடி மசூதி கட்டுமானப் பணிகள் நடக்கவில்லையே ஏன்?
அயோத்தியில் மசூதி கட்டுமான பணிகள் அரசாங்க நடைமுறைகளால் தாமதமாகிறது என்கிற புகார் முன் வைக்கப்படுகிறது.
அயோத்தி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்புப்படி அயோத்தியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் மசூதி கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால் நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகள் தொடருவதால் மசூதி கட்டுமான பணிகள் முடங்கக் கூடிய சூழ்நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தி இந்து நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது: பாபர் மசூதி- ராமஜென்ம பூமி வழக்கில் 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. 16-ம் நூற்றாண்டு மசூதி இடிக்கப்பட்ட நிலத்தில் கோவில் கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு அனுமதி அளித்தது. அதேநேரத்தில் உத்தரப்பிரதேச அரசு அல்லது மத்திய அரசு, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் 2020-ம் ஆண்டு உத்தரப்பிரதேச அரசு, சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு தன்னிபூர் என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கியது. மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இருந்து இது 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனையடுத்து அந்த நிலத்தில் மசூதி கட்டுவதற்காக இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை ஒன்று வக்பு வாரியத்தால் உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை உருவாக்கும் மசூதிக்கு மஸ்ஜித்-இ-அயோத்தி என பெயரிடப்பட்டது.

இது தொடர்பாக இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் பெயர் தெரிவிக்க விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறுகையில், நிலம் ஒதுக்கீடு செய்த பின்னரும் கூட எந்த ஒரு முன்னேற்றமும் அரசு தரப்பில் இருந்து கிடைக்கவில்லை. முதன்மையான இடத்தில் எங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புறநகர் பகுதியில்தான் நிலம் ஒதுக்கப்பட்டது. 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் மசூதி கட்ட வரைபடம் வடிவமைக்கப்பட்டது. அதில் மருத்துவமனை, கம்யூனிட்டி சமையலறை, நூலகம், விடுதலை வீரர் மவுலவி அகமதுல்லா ஷா பெயரிலான ஆய்வு மையம் ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிட்டோம். இதற்கான வரைபடத்தை டெல்லி ஜாமியா மில்லா இஸ்லாமியா பல்கலைக் கழக வல்லுநர் பேராசிரியர் அக்தர் உருவாக்கினார். இந்த வரைபடமாக அயோத்தி நகர வளர்ச்சி குழுமத்திடம் உரிய கட்டணத்துடன் சமர்பிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் ஒப்புதல் வரவில்லை. பல்வேறு துறைகளில் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து கொண்டிருக்கின்றனர். அப்போதுதான் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என்கின்றனர். இந்த ஒட்டுமொத்த நடைமுறையும் முடிவடையவே ஓராண்டு காலம் ஆகிவிட்டது. பெரும்பாலான துறைகளில் தடையில்லா சான்றிதழ்கள் பெற்றுவிட்டோம். ஆனால் தீயணைப்பு துறையினர்தான் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர்.
இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான அர்ஷத் அஃப்சல் கான் கூறுகையில், ஒவ்வொரு நாளும் 50கி.மீ தொலைவில் உள்ள மசூதி கட்டுமான இடத்துக்கு சென்று வருகிறேன். ஒவ்வொரு துறைசார் அலுவலகங்களிலும் ஏறி இறங்கி வருகிறோம். தற்போதைய நிலையில் அயோத்தி நகர வளர்ச்சி குழுமம், 12 மீட்டர் சாலையை அகலப்படுத்தினால் முட்டுக்கட்டை நீங்கிவிடும் என நம்புகிறோம் என்கிறார்.
அறக்கட்டளையின் மற்றொரு நிர்வாகியான அஃப்தார் ஹூசைன் சித்திக் கூறுகையில், எங்களுக்கு கொடுக்கப்பட்டது விவசாய நிலம். அதில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என ஆட்சேபனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகையால் விவசாய நிலம் என்ற வகைப்பாட்டில் இருந்து இந்த நிலத்தை மாற்றித் தர வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாகவும் அயோத்தி நகர வளர்ச்சி குழுமத்துக்கு எழுதியிருக்கிறோம். ஆனால் நிலைமை அப்படியேதான் இருக்கிறது என்கிறார்.
இது தொடர்பாக அயோத்தி வளர்ச்சி குழும செயலாளர் சத்யேந்திர சிங் கூறுகையில், நிர்வாக ரீதியாக எந்த முட்டுக்கட்டையுமே இல்லை. அரசு தரப்பில் இருந்து அனைத்துவிதமான அனுமதியையும் பெற்றுவிட்டோம். அயோத்தி வளர்ச்சி குழுமத்தின் போர்டு மீட்டிங் முன்பாக இதனை வைக்க இருக்கிறோம். விரைவில் போர்டு மீட்டிங்கில் ஒப்புதல் பெறப்படும் என்கிறார்.
இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையானது பொதுமக்களிடம் நிதி வசூலித்துதான் மசூதியை கட்டுகிறது; முதல் நிதியை வழங்கியதே இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான். இதுவரை ரூ45 லட்சம் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கோவில் அறக்கட்டளை இதுவரை ரூ3,500 கோடி நிதி வசூலித்துள்ளது. ஆனால் இருதரப்பு நிதி வசூலிப்பை ஒப்பிடுவதை நிராகரித்த அறக்கட்டளை நிர்வாகி ஹூசைன், அமைதியை வலியுறுத்தவே நாங்கள் மசூதியை கட்டுகிறோம் என்கிறார் அழுத்தம் திருத்தமாக.












Click it and Unblock the Notifications