முசாபர்நகர் கொலையாளிகளை பழிவாங்குவோம்... தொடரும் ஆசாம் கான் சர்ச்சைகள்!!
லக்னோ: சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவரும் உ.பி. அமைச்சருமான ஆசாம் கான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தற்போது முசாபர்நகர் கொலையாளிகளை தேர்தல் மூலம் பழியெடுப்போம் என்றும் மோடி ஒரு பெரிய நாய் என்றும் பேசி புது பஞ்சாயத்துக்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஆசாம் கான் என்ன பேசினாலும் நடவடிக்கை மேற்கொண்டாலும் தடலாடிதான்.. சர்ச்சைதான் என்றாகிவிட்டது. கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து சர்ச்சைகளை சரவெடிகளாக வெடிக்க வைத்து வருகிறார் ஆசாம்கான்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் நேற்று பேசிய ஆசாம்கான், முசாபர்நகர் கொலையாளிகளை பழிவாங்க தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்றார். அத்துடன் 2002 குஜராத் வன்முறைகளின் போது பெண்களும் குழந்தைகளும் சித்தரவதை செய்யப்பட்டதாகவும் ஆசாம்கான் குற்றம்சாட்டினார்.

பெரிய நாய் மோடி
மேலும் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை பெரிய நாய் என்று விமர்சித்து பேசியிருக்கிறார். குஜராத் வன்முறையினர் சிறுபான்மையினர் படுகொலை செய்தது பற்றி மோடி கருத்து தெரிவிக்கையில், நான் கார் ஓட்டிக் கொண்டு போகும் போது அதன் குறுக்கே நாய்க்குட்டி அடிபடுவதைப் போன்றது அந்த சம்பவம் என்றார். இதன் மூலம் முஸ்லிம்களை நாய்கள் என்று மோடி கூறியதாக விமர்சனம் எழுந்தது. இதை அடிப்படையாக வைத்து மோடியை நாயுடன் இணைத்து பேசிவருகிறார் ஆசாம்கான். அதனால்தான் நாங்கள் குட்டிநாய்கள் என்றால் அவர் பெரிய நாய்தான் என்று விமர்சித்திருக்கிறார் ஆசாம்கான்.

கார்கில் விவகாரம்
அத்துடன் கார்கில் போர் வெற்றிக்கு முஸ்லிம் வீரர்களே காரணம் என்று பேசியதை தற்போது நியாயப்படுத்தியும் பேசி வருகிறார் ஆசாம்கான். இது குறித்து அவர் கூறுகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர்தான் முஸ்லிம் வீரர்களை தந்திரோபாய வகையில் ராணுவம் பயன்படுத்தியதாக என்னிடம் தெரிவித்தார். அந்த ராணுவ அதிகாரியின் விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுகிறேன்.
அதாவது பாகிஸ்தான் ராணுவத்தை வழிக்குக் கொண்டுவரத்தான் முஸ்லிம் வீரர்களை மட்டும் கார்கில் போருக்கு ராணுவம் தேர்வு செய்து அனுப்பியது. ஏன் இந்த கருத்தை ஏற்க மறுக்கிறீர்கள்? நாட்டுக்காக சேவையாற்றுவதில் முஸ்லிம்களுக்கும் சம பங்கு உள்ளது அல்லவா?ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்காக என் உயிரைக் கொடுப்பேன் என்று சொல்வதில் என்னதான் தவறு இருக்கிறது..? எனக்கு புரியவில்லையே என்றார்.

ஆசாம் கானின் எருமைகளைத் தேடிய போலீசார்
இதற்கு முன்பும் சில சர்ச்சைகளை உருவாக்கி வைத்திருக்கிறார் ஆசாம்கான். இவரது வீட்டு எருமைகளைத் தேடி போலீசார் அலைந்தனர். எருமைகளை கோட்டைவிட்டதற்காக போலீசார் சஸ்பென்ட் செய்யபப்ட்டனர். இதை செய்திகளாக ஊடகங்கள் வெளியிட அப்போது விக்டோரியா மகாராணியைவிட எனது எருமைகள் புகழ்பெற்றுவிட்டன.. என் எருமைகளால் எனக்கு பெருமை கிடைத்தது என்று பிப்ரவரி மாதம் பேசினார்.

ஆசிட் ஊற்றி எரிப்பார் மோடி
கடந்த மாதம் குஜராத் கலவரங்களைப் பற்றி பேசும் போது, மோடிக்கு ஓட்டுப் போடாமல் அங்கு இருக்க முடியுமா? ஆசிட் ஊற்றி எரித்துவிடமாட்டார்களா? அங்கு போய் உயிரோடு வாழ முடிந்தால்தானே மோடிக்கு ஓட்டுப் போட முடியும் என்றார் ஆசாம் கான்.

பயங்கரவாதி அமித் ஷா..
அதன்பின்னர் சில நாட்களுக்கு முன்பு அமித் ஷாவை ரவுடி நம்பர் 1 என்று விமர்சித்தார். அத்துடன் உத்தரப்பிரதேசத்தில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார் என்று சாடினார் ஆசாம்கான்.. நாள்தோறும் சர்ச்சைகளின் நாயகனாகவே வலம் வருகிறார் ஆசாம் கான்.

மீண்டும் அமித் ஷா மீது தாக்கு
இதனிடையே தாம் முசாபர்நகர் வன்முறைக்கு பழிவாங்க வேண்டும் என்ற சொல்லவில்லை என அமித்ஷா கூறியிருக்கிறார். இதனையும் ஆசாம் கான் விட்டுவிடவில்லை.. "அமித்ஷா எங்களை பழிவாங்க வேண்டும் என்கிறார்.. தன்னோடை தலையில இருக்கிற முடியையே பாதுகாக்க முடியாதவர் எங்களைப் பாதுகாப்பாராம்" என்று அடித்துவிட்டிருக்கிறார் ஆசாம் கான்.












Click it and Unblock the Notifications