உலகையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. கடந்து வந்த பாதை
உலகையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு சம்பவமும் அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களும் குறித்த ஒரு பார்வையை இச்செய்தியில் பார்க்கலாம்.
டெல்லி: விசாரணை நடத்தாமலேயே, பாபர் மசூதி வழக்கிலிருந்து அத்வானியை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. உலகையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு சம்பவமும் அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களும் குறித்த ஒரு பார்வை:

1528: அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்களால் நம்பப்படும், பகுதியில், பாபர் மசூதி கட்டப்படுகிறது.
1853: மசூதி கட்டப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அந்த பகுதியில் இந்து-முஸ்லிம்கள் நடுவே மோதல் நடந்துள்ளது.
1859: பிரிட்டிஷ் அரசாங்கம், ஒரு வேலியை போட்டு இந்து-முஸ்லிம்கள் தனித்தனியாக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தது.
1949: பாபர் மசூதியின் உள்ளே, ராமர் சிலைகள் நிறுவப்பட்டன. முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இரு தரப்புமே கோர்ட்டுக்கு சென்றன. சர்ச்சைக்குரிய பகுதி என அறிவித்த அரசு, கேட் போட்டு மக்கள் நுழைய தடை விதித்தது.
1984: விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டின்பேரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அத்வானி இந்த கோஷத்தை முன்னெடுத்த முக்கிய தலைவராக மாறினார்.
1986: சர்ச்சைக்குரியதாக அறிவிக்கப்பட்ட பகுதி திறக்கப்பட்டு இநவ்துக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். முஸ்லிம்கள் பாபர் மசூதி செயல்கமிட்டி என்ற பெயரில் அமைப்பு ஆரம்பித்து போராட்டம் நடத்தினர்.
1989: சர்ச்சைக்குரிய மசூதி என அறிவிக்கப்பட்ட பகுதியின் அருகே, ராமருக்கு கோயில் அமைக்க வி.ஹெச்.பி முயற்சிகளை தொடங்கியது. நாடு தழுவிய பிரசாரத்தில் வி.ஹெச்.பி ஈடுபட்டது.
1990: வி.ஹெச்.பி தொண்டர்கள், பாபர் மசூதியின் சில பகுதிகளை சேதப்படுத்தினர். அப்போதைய பிரதமர் சந்திரசேகர் இரு தரப்பையும் சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
1991: அயோத்தி அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.
1992: வி.ஹெச்.பி, சிவசேனை மற்றும் பாஜக தொண்டர்களால், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுக்க முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். அது கலவரமாக மாறியது. இரு தரப்பும் மோதியதில் சுமார் 2000த்துக்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டது.
ஜனவரி 2002: இந்து-முஸ்லிம் மத தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அயோத்தி பிரிவு என்ற அமைப்பை மூத்த அதிகாரி தலைமையில் உருவாக்கினார்.
பிப்ரவரி 2002: உத்தரவிரதேச சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் ராமர் கோயில் கட்டும் வாக்குறுதியை தவிர்த்தது பாஜக.
ஆனால் வி.ஹெச்.பியோ, மார்ச் 15ம் தேதிக்குள் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என நிர்பந்தித்தது. இதையடுத்து அந்த அமைப்பின் தொண்டர்கள் நாடு முழுவதிலுமிருந்து புறப்பட்டு அயோத்தி வந்தனர். அதில் பங்கேற்ற இந்து சாமியார்கள் மற்றும் தொண்டர்கள் பயணித்த ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. கோத்ரா ரயில் எரிப்பு என அறியப்படும் இச்சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர்.
மார்ச் 2002: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் வெடித்த மத கலவரத்தில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
ஏப்ரல் 2002: மசூதி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து ஹைகோர்ட்டில் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணையை தொடங்கியது.
ஜனவரி 2003: தொல்லியல் துறை மூலம், சர்ச்சைக்குரிய இடத்தில் ஆய்வு நடத்த கோர்ட் உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 2003: மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் துறை அறிக்கை சமர்ப்பித்தது. இதை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
ஜூலை 2005: ஜீப்பில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்து சர்ச்சைக்குரிய இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுட்டு வீழ்த்தினர்.
ஜூன் 2009: 17 வருட விசாரணைக்கு பிறகு லிபரான் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்தது. பாஜக தலைவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பில் தொடர்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
செப். 2010: சர்ச்சைக்குரிய இடத்தை பிரித்து, இந்து, முஸ்லிம், நிர்மோகி அக்கரா அமைப்புகளுக்கு வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இந்து-முஸ்லிம் அமைப்புகள் சுப்ரீம் கோர்ட் சென்றன.
மே 2011: ஹைகோர்ட் உத்தரவை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.












Click it and Unblock the Notifications