ஓடும் ரயிலில் டாய்லெட்டில் பிறந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை உயிர் பிழைப்பு
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஓடும் ரயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவுரி பல்பி(22). நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது குடும்பத்தாருடன் சூரத்காரில் இருந்து ஹனுமன்காருக்கு ரயிலில் கிளம்பினார். வழியில் அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மயங்கிவிட்டார்.
குழந்தை கழிவறை தொட்டி வழியாக ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்தது. பவுரி வெகுநேரமாகியும் வராததால் அவரின் உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்தார்.
இதற்கிடையே தண்டவாளத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு ரயில்வே ஊழியர் ஒருவர் அதை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். ஓடும் ரயிலில் இருந்து விழுந்தும் குழந்தை உயிர் பிழைத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
ரயில் ஹனுமன்காரை அடைந்த உடன் பவுரியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரின் குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு கொண்டு வந்து தாயிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications