பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்த மருத்துவமனை... பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி !
மும்பை தனியார் மருத்துவமனையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழந்தது.
மும்பை: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை சிகிச்சைக்காக மருத்துவமனை ஏற்க மறுத்ததால் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழந்த சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் பகுதியான கோவண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் சர்மா. இவரது மனைவி கிரண் கருவுற்றிருந்த நிலையில் அங்குள்ள ஜீவன் ஜோத் மருத்துவமனையில் ஆலோசனை பெற்று வந்தார். கிரணை பரிசோதித்த பெண் மருத்துவர் அடுத்த மாதம் 7ம் தேதி பிரசவம் ஆகலாம் என தெரிவித்திருந்தனர். இதனிடையே நவம்பர் 9ஆம் தேதியன்று காலையில் கிரணுக்கு திடீரென பிரசவ வலி எடுத்தது. இதனால் அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது.
குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததால் அதன் எடை குறைவாக காணப்பட்டது. உடனடியாக கிரண் மற்றும் அவரது குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடி சிகிச்சை அளித்த அந்த மருத்துவர், 6,000 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அப்போது ஜெகதீஷ் அளித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தை பலியானதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ஜெகதீஷ் ஷர்மா சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுகொண்ட போலீசார் மருத்துவமனை மற்றும் பெண் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.