ஜெகன் ஒரு ‘சைக்கோ’.. பாலையா கருத்தால் ரணகளமான ஆந்திர சட்டசபை.. சிரஞ்சீவி செம ட்விஸ்ட்
அமராவதி: ஆந்திரா மீல்ஸ் போல அந்த மாநில அரசியலிலும் காரசார விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. திருப்பதி லட்டு தொடங்கி டோலிவுட் வரை பல விவகாரங்களில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவும். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனை 'சைக்கோ' என்று நடிகரும் தெலுங்கு தேசம் எம்எல்ஏவுமான பாலையா என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணா விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு சிரஞ்சீவி அளித்துள்ள பதில்தான் செம ஹைலைட்
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் உள்ளது. சந்திரபாபு முதலமைச்சராக உள்ளார். அங்கு ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான அரசியல் போட்டி நிலவி வருகிறது. சந்திரபாபு ஆட்சிக்கு வந்ததில் இருந்து திருப்பதி லட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

ஜெகன் மீது விமர்சனம்
சட்டசபையிலும் அந்த இரண்டு கட்சிகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. ஆந்திரா சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பாஜக எம்எல்ஏ சீனிவாஸ், "இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ஆட்சி தெலுங்கு திரையுலகை புறக்கணித்தார். முன்னணி திரை கலைஞர்கள் பலர் கடந்த ஆட்சியில் ஜெகனை சந்திக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அதை அவர் தவிர்த்துவிட்டார். மூத்த நடிகர் சிரஞ்சீவி தலையிட்டு பேசிய பிறகு தான் ஜெகன் திரை கலைஞர்களை சந்திக்க முன் வந்தார்." என்று பேசினார். அவரின் பேச்சுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி செய்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவும், நடிகருமான பாலையா என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணா குறுக்கிட்டார்.
சைக்கோ
சீனிவாஸ் கருத்தை ஆமோதித்த பாலகிருஷ்ணா, "ஜெகன் ஒரு சைக்கோ." என்று விமர்சித்தார். இது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பாலகிருஷ்ணாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். "பாலகிருஷ்ணா எம்எல்ஏவாக இருக்கவே தகுதியற்றவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறினர்.
இதுதொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், "தங்களின் இஷ்டத்திற்கு வசனங்களை பேசுவதற்கு சட்டசபை ஒன்றும் சினிமா செட் இல்லை. பாலகிருஷ்ணாவுக்கு ஜெகன் உதவியுள்ளார். பாலகிருஷ்ணாவின் அகாண்டா படம் வெளியீட்டின் போது சில பிரச்சனை எழுந்தன. அப்போது அவருக்கு ஜெகன் தனிப்பட்ட முறையில் உதவி செய்துள்ளார்.
பதிலடி
பாலகிருஷ்ணாவுக்கு உரிய உதவிகளை செய்து கொடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாலகிருஷ்ணா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோதும் ஜெகன் பல விதங்களில் உதவி செய்திருக்கிறார். அதையெல்லாம் மறந்துவிட்டு பேசலாமா. அரசியலில் ஸ்கோர் செய்வதற்காக உண்மைகளை மறப்பது எந்த வகையில் நியாயம்." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் வலுக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் சிரஞ்சீவி, "கடந்த ஆட்சியின்போது தயாரிப்பு செலவு, டிக்கெட் விலை அதிகமாக இருந்தபோது ஜெகன் மோகனை சந்தித்தோம். அப்போது அவர் எங்களின் பிரச்சனைகளை கனிவுடன் கேட்டு உரிய நடவடிக்கையும் எடுத்தார். அதன் பிறகு டிக்கெட் விலை குறைக்கப்பட்டது. இது திரைத்துறையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.
அப்போது என்னுடைய படம் வால்டர் வீரய்யா, பாலையாவின் வீர சிம்மா ரெட்டி படங்கள் வெளியாகி பலனடைந்தன." என்று கூறியுள்ளார். சிரஞ்சீவியின் கருத்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்துகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வேகமாக பரப்பி பதிலடி கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications