ஆடு, கோழி பலியிட தடையா? இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா? திரிபுரா கொந்தளிப்பு
அகர்தலா: திரிபுராவில் கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையாகி உள்ளது. 1949-ல் இந்தியாவுடன் இணையும் போது திரிபுராவுக்கு கொடுத்த வாக்குறுதி மீறப்படுவதாக அம்மாநில அரசே நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
1355 ஆண்டுகள், 184 அரசர்கள் ஆண்ட திரிபுரா 1949-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அப்போதைய திரிபுரா மகாராணி காஞ்சன் பிரபா தேவியும் இந்தியாவின் கவர்னர் ஜெனரலும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இடம்பெற்றிருப்பது, புகழ்பெற்ற திரிபுரசுந்தரி கோவில் உள்ளிட்ட 14 ஆலயங்களுக்கு பாரம்பரிய வழிபாடுகளுக்கு திரிபுரா அரசு தரும் நிதி உதவி தொடரும் என்பதுதான். திரிபுரசுந்தரி கோவிலில் ஆடு பலியிடுவது வழக்கம். இதற்கும் அரசு நிதி உதவி செய்து வருகிறது. இதை மாற்ற கூடாது என்பது இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தின் முக்கிய சரத்து.
இதற்கு எதிராக, அரசு நிதி உதவியுடன் ஆடு, கோழிகளை பலியிடுவது இந்துக்களின் மனதை புன்படுகிறது என சுபாஷ் பட்டர்ஜி என்பவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சஞ்சய் கரோல், அரிந்தம் லோத் ஆகியோர், திரிபுராவில் மதவழிபாட்டு இடங்களில் ஆடு கோழிகளைப் பலியிடக் கூடாது என அதிரடி தடை விதித்தனர்.
அரசும் இத்தகைய ஆடு கோழி பலியிடுதல்களுக்கு உதவி செய்யக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மாநில தலைமை செயலாளர், அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன், கோவில்களுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்துவிடலாமே தவிர பலியிடக் கூடாது; அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தற்போது திரிபுரா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. 1949-ல் இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறக் கூடாது என்ற தங்களது வாதத்தை திரிபுரா உயர்நீதிமன்றம் நிராகரித்திருப்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications