மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை... இடதுசாரிகள் சார்பில் ஆந்திராவில் இன்று முழு அடைப்பு
மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் இடதுசாரிகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
அமராவதி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இடதுசாரிகள் சார்பில் இன்று ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் விவசாயிகள், சுகாதாரத்துறை என்று பொதுவாக சாமானியர்களை கவரும் திட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் மாநிலங்களின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட எந்த திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

குறிப்பாக மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திராவுக்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்காதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக அக்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருகின்றனர்.
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும், பொது பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் சார்பில் ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பல முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனசேனா, மாணவர் அமைப்புகள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரசு போக்குவரத்துக்கழகம் இதில் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் அரசுப் பேருந்துகளை மறித்து இடதுசாரி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக காலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இடங்களில் இடதுசாரிகள் வாகனங்களை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்












Click it and Unblock the Notifications