பெங்களூரில் மீண்டும் அக்கிரமம்- கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் புகுந்து 17 வயது மாணவியை சீரழித்த 3 பேர்
பெங்களூரில் கடந்த வாரம் 22 வயது பெண் ஓடும் காரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் பெங்களூரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் படிக்கும் 6 வயது மாணவி பள்ளி ஊழியர்கள் 2 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரின் புறநகர் பகுதியான ஹென்னூரில் உள்ளது சிஸ்டர்ஸ் ஆஃப் ஹோலி நேட்டிவிட்டி என்ற கன்னியாஸ்திரிகள் இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் தங்கி 17 வயது சிறுமி ஒருவர் கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த புதன்கிழமை அவர் தரை தளத்தில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த இல்லத்திற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் சிறுமி மயங்கிய பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
சிறுமி புனித ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.