பெங்களூரில் போதையில் ஸ்கூட்டர் ஓட்டி, சிக்கி, போலீசாரை தாக்கி அட்டூழியம் செய்த பெண்
பெங்களூர்: பெங்களூரில் குடிபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த பெண் ஒருவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
பெங்களூர் கோரமங்களா பகுதியைச் சேர்ந்தவர் டிம்பிள் என்கிற டிம்பி. அவர் அப்பகுதியில் உள்ள பெண்கள் பாரில் பணியாற்றி வருகிறார். அவர் இரவு நேரத்தில் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வில்சன் கார்டன் பகுதியில் போலீசார் அவரை நிறுத்தி அவரை மதுவின் அளவை தெரிந்து கொள்ளும் சோதனையை செய்ய முயற்சித்தனர்.

டிம்பியோ சோதனைக்கு அனுமதிக்காமல் போலீசாரை கெட்ட வார்த்தைகளால் திட்டி சண்டைக்கு பாய்ந்தார். ஒரு பெண் உள்பட 8 போலீசார் இருந்தும் அவர்களை டிம்பி திட்டினார். ஒரு போலீஸ்காரர் டிம்பியின் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டதையடுத்து அவருக்கு சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை படம் பிடித்த போலீஸ்காரரின் செல்போனை பறித்த டிம்பி அதை உடைத்துவிட்டார். மேலும் வாக்கி டாக்கி ஒன்றையும் அவர் உடைத்தார். வீடியோ எடுத்த போலீஸ்காரரையும், பெண் போலீஸையும் அவர் தாக்கினார்.
பின்னர் போலீஸ்காரரின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பியோடினார். போலீசார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் சுமார் 2 மணிநேரமாக நடந்துள்ளது.
போலீசாரை தாக்கிய டிம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications