பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பெங்களூர் போலீஸ் கமிஷனர் அதிரடி பணியிடமாற்றம்
பெங்களூர்: பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்ததன் எதிரொலியாக, நகர போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகர போலீஸ் கமிஷனராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி, எம்.என்.ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றங்கள் அதிகரிப்பு
பள்ளி வளாகத்திலேயே, 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது, கூடுதல் கட்டணம் கொடுக்க மறுத்ததற்காக ஆட்டோ டிரைவரால் நடுரோட்டில் பெண் தாக்கப்பட்டது, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்த கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டது, கன்னியாஸ்திரி பயிற்சி பள்ளிக்குள் புகுந்து கன்னியாஸ்திரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற சம்பவங்களால் நகரமே கொந்தளித்துப்போயுள்ளது.
போராட்டம் வலுத்தது
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களை கண்டித்து சட்டசபையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு துணியுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தன. பெண்கள் அமைப்பு, மாணவர் அமைப்புகளும் பெங்களூர் வீதிகளில் தினமும் போராட்டம் நடத்திவருகின்றன. பெங்களூர் நகரில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுடன், உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பதவி விலக கோரிக்கைகள் வலுத்தன.
அவசர ஆலோசனை
இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
புதிய போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி
இதன்படி, போலீஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. தற்போதைய கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர், மாநில ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் டிஜிபியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகர புதிய போலீஸ் கமிஷனராக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றும் எம்.என்.ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு கமிஷனரும் மாற்றம்
பெங்களூர் நகர சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக பணியாற்றும் கமல்பந்த், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் மனித உரிமை பிரிவுக்கான ஐஜிபியாக நியமிக்கப்பட்டு, அந்த பதவியில் இருந்த அலோக் குமார், பெங்களூர் நகர சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் ஏடிஜிபியாக இருந்த கிஷோர் சந்திரா, பெங்களூர் நகர சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.