பெண் விவகாரம்: மைசூரில் முன்னாள் பாஜக அமைச்சர் தற்கொலை முயற்சி
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் பாஜக அமைச்சர் எஸ்.ஏ. ராமதாஸ்(54). பிரம்மச்சாரி. இந்நிலையில் நேற்று 30களில் இருக்கும் பிரேமாகுமாரி என்ற பெண் ராமதாஸ் தன்னுடன் 5 ஆண்டுகளாக பழகி வருவதாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்தை வெளிப்படையாக ஒப்புக்க கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக தன்னை ராமதாஸ் கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ராமாதஸ் தனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாக பிரேமா தெரிவித்தார்.
இதையடுத்து ராமதாஸ் மைசூரில் தான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நேற்று இரவு அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து பிரேமாகுமாரி கூறுகையில்,
எனக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் தான் கேட்டு செய்தியாளர்களை சந்தித்தேனே தவிர அவரை தற்கொலைக்கு தூண்ட அல்ல. நான் செய்தியாளர் சந்திப்பில் இருந்தபோதே அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு இந்த பேட்டியை உடனே முடித்துக் கொள்ளாவிட்டால் நான் விஷம் குடித்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர் என்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் என்றார்.