பெங்களூரில் பாலியல் தொழிலாளியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட பி.இ. மாணவர், 3 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் 26 வயது பாலியல் தொழிலாளியை பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் இருந்து வந்து பெங்களூரில் பாலியல் தொழில் செய்யும் 26 வயது பெண் ஹெச்.எஸ்.ஆர். லே அவுட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வைத்து 4 பேரால் கடந்த சனிக்கிழமை பலாத்காரம் செய்யப்பட்டார். லாட்ஜில் இருந்து தப்பிக்க முயன்ற அவரை இரண்டாவது மாடியில் இருந்து அந்த 4 பேரும் தள்ளிவிட்டதில் அவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அந்த பெண்ணை வாணி விலாஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் தர மறுத்துவிட்டார். ஆனால் நான்கு பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணை சீரழித்த வழக்கில் கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்த உறவினர்களான பகுபலி சுபாஷ்(23), பகுபலி ஷங்கரப்பா(22), மாண்டியாவைச் சேர்ந்த மஞ்சுநாத்(24) மற்றும் அரிகெரேவைச் சேர்ந்த வினோத் ராஜ்(23) ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஒயிட்ஃபீல்டில் உள்ள ஹகதூரில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அவர்கள் ஆன்லைனில் ஏஜெண்ட் மூலம் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று அவரை அழைத்துள்ளனர்.
ஒருவர் தான் அழைக்கிறார் என்று நினைத்து லாட்ஜுக்கு வந்த அந்த பெண் நான்கு பேர் இருப்பதை பார்த்து தப்பித்துச் செல்ல முயன்றார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை அறைக்குள் இழுத்து பலாத்காரம் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வினோத் என்ஜினியரிங் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.