பஸ் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்ததால் பெங்களூரு மக்கள் அவதி..ஆட்டோக்களில் அநியாய ரேட்!
பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக, பெங்களூருவில் போக்குவரத்துதான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்கா இன்று கர்நாடக பந்த் நடந்து வருகிறது. இதையொட்டி, காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை முழு அடைப்பு நடத்த கன்னட அமைப்புகள் கோரிக்கைவிடுத்தன. இதற்கு, அரசு ஆதரவும் மறைமுகமாக இருப்பதாக கூறப்படுவதால், பந்த் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

கர்நாடக அரசு பஸ் ஊழியர் சங்கங்களும், பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால் காலை முதலே பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. இது தெரியாமல், பந்த் லேசான அளவில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து வெளியூர்கள் செல்ல கிளம்பியவர்களும், வெளியூர்களில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களுக்கு வந்தவர்களும் பெரிதும், பாதிக்கப்பட்டனர்.
பெங்களூருவில் ஆட்டோ, டாக்சி டிரைவர் சங்கங்கள், பந்த்துக்கு ஆதரவு கொடுத்திருந்தாலும், வருமான தேவைக்காக சிலர் ஆட்டோ, டாக்சிகளை இயக்கினர். ஆனால் அது சொற்ப அளவில் இருந்தது. மீட்டருக்கு மேல் பல மடங்கு பணம் கேட்டு பயணிகளை தொந்தரவு செய்த ஆட்டோ டிரைவர்களை காண முடிந்தது.
மெயின் ரோடுகளில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், உள் தெருக்களில் மளிகை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கன்னட அமைப்பினர் பேரணி வருவது போல இருந்தால் மட்டுமே அங்கு கடைகள் அடைக்கப்படுகின்றன.
பஸ் போக்குவரத்து இந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியாமல், பெங்களூரு மத்திய மார்க்கெட் பகுதியான கே.ஆர்.மார்க்கெட்டில் காய்கறி கடைகளை வழக்கம்போல திறந்த வியாபாரிகள், ஏமாற்றத்துடன் அமர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications