பெங்களூர் குண்டுவெடிப்பு- 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை! நாடு முழுவதும் எச்சரிக்கை!!
பெங்களூர்: பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்ச் சாலையில் இன்று இரவு 8.45 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில் சென்னை பெண் பவானி பலியானார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இருவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் பான் கடை வைத்திருந்த ஒருவரிடமும் அப்பகுதியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் சர்ச் சாலை உட்பட முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமராக்கள் பதிவுகளையும் போலீசார் ஆராந்து வருகின்றனர். இதன் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர்கள் பற்றிய துப்பு கிடைக்குமா என்றும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனிடையே பெங்களூர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் உஷார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தீவிரவாதிகள் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் மத்திய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் டெல்லி, மும்பை உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications