இந்தியாவை தாக்க திட்டமிடும் வங்கதேச தீவிரவாத அமைப்பு: ரா எச்சரிக்கை
டெல்லி: வங்கதசே தேசியவாத கட்சி உறுப்பினர்களை பத்திரமாக நாட்டுக்குள் கொண்டு வர பல முக்கியஸ்தர்களை கடத்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி நாட்டை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பதாக அந்நாட்டில் உள்ள ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அவாமி லீக் கட்சி வங்கதேச தேசியவாத கட்சி உறுப்பினர்கள் பலர் மீது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் வங்கதேச தேசியவாத கட்சி உறுப்பினர்களுக்கு உதவி செய்ய ஜமாத்துல் முஜாஹிதீன் முடிவு செய்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஒன்றை மேற்கு வங்கத்தில் உள்ள புர்த்வானுக்கு அனுப்பியுள்ளார். இந்தியாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு கிளை துவங்குவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை பிரதமரின் இந்த நடவடிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச தீவிரவாதிகளை வளரவிடக் கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் குழு புர்த்வான் குண்டுவெடிப்பு விசாரணை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளது.
ஜமாத்துல் முஜாஹிதீன் பலரை மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதால் மாநில போலீசாரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் திட்டங்களை தகர்ப்பதால் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ஜமாத்துல் முஜாஹிதீன் கிளைகளை மூடுவோம் என்று இந்தியா வங்கதேசத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஜமாத்துல் முஜாஹிதீன் வங்கதேசத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கியுள்ளனர். அவர்கள் வங்கதேச பிரதமரை கூட குறி வைத்துள்ளனர்.
தீவிரவாதிகள் வங்கதேசத்தில் பலரை கடத்தி வைத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச தேசியவாத கட்சியினர் நாடு திரும்ப கோரிக்கை விடுக்க உள்ளனர் என்று ரா தெரிவித்துள்ளது.
வங்கதேச தேசியவாத கட்சியினர் பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவாமி லீக் கட்சி நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற திட்டமிடும் ஜமாத் மீது கோபத்தில் உள்ளது. ஜமாத் தனது திட்டத்தை செயல்படுத்த அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது.
அண்மையில் அல் கொய்தாவும் ஜமாத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அவாமி லீக் இந்தியா விரித்த வலையில் சிக்கி நாட்டை இந்து நாடாக்க முயல்வதாக அல் கொய்தா குற்றம் சாட்டியது.