சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும் - 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற சிறப்பு ஏற்பாடு - ரிசர்வ் வங்கி
ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டெல்லி: இந்திய நாட்டு மக்களின் முக்கிய பிரச்னையாக தற்போது இருப்பது 500, 1000 ரூபாய் பிரச்னை. கையிருப்பில் உள்ள பழைய நோட்டுக்களை எப்போது எப்படி மாற்றுவது என்ற யோசனையிலேயே பலருக்கு படபடப்பு அதிகரித்துள்ளது. இதற்காக வங்கிக்கு லீவ் போட்டு விட்டு போகவேண்டுமா என்று யோசித்தவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி வெளியாகியுள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது, அதை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்ததோடு, நவம்பர் 9ம் தேதி ஒருநாள் வங்கிகள் செயல்படாது என்றும் இரண்டு நாட்கள் ஏடிஎம் செயல்படாது என்றும் அறிவித்தது.
ஏற்கனவே வங்கிகளில் ஏதேனும் பணப்பரிவர்த்தனை செய்யச் சென்றால் வங்கி அதிகாரிகளின் அதிகம் நொந்து கொள்வார்கள். வயதானவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள் சென்றால் அவர்கள் பாடு பெரும்பாடுதான்.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளை நாடுவார்கள். இதனால் வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி அனுப்பிய புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் சென்னை வந்தன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வங்கிகளில் புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நவம்பர் 12ம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிறு கிழமை வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications