டெல்லியில் பாஜக தோற்றதைபோல, பெங்களூரில் காங். தோற்றுள்ளது: சித்து எஸ்கேப் பதில்
பெங்களூர்: மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், டெல்லி சட்டசபை தேர்தலில் பரிதாபமாக தோற்றது. எனவே பெங்களூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் கர்நாடக அரசுக்கான சர்டிபிகேட் என்று கூற முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ரிசல்ட் பற்றி செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியதாவது: பெங்களூரில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழ்நிலை நிலவி வந்தது. தொலைக்காட்சிகள் கூட, காங்கிரஸ் வெற்றி பெறும் என்றுதான் கருத்துக் கணிப்பில் கூறியிருந்தன. இருப்பினும் காங்கிரஸ் தோற்றுள்ளது.
இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், மக்களின் தீர்ப்பை மதிக்கத்தான் வேண்டும். பெங்களூர் தேர்தல் முடிவுகளை எந்த வகையிலும், மாநில அரசுக்கான மதிப்பெண்ணாக பார்க்கப்பட முடியாது. இருப்பினும், காங்கிரஸ் அடைந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மக்களவை தேர்தலில் டெல்லியில் பாஜக அமோக வெற்றி பெற்றது. சில மாதங்கள் கழித்து நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. ஆம் ஆத்மி அரசு அமைத்தது. அதற்காக, பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று கூறிவிட முடியாது. பெங்களூர் தேர்தலையும் அதைப்போலத்தான் பார்க்க வேண்டும். கடந்த தேர்தலைவிட இம்முறை மாநகராட்சியில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளோம்.
சமீபத்தில் நடந்து முடிந்த 30 மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் 23 பஞ்சாயத்துகளை காங்கிரஸ் கைப்பற்றியது. கிராமத்தில் சாதித்த காங்கிரஸ், நகரத்தில் ஏன் பின்தங்கியது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.