பெங்களூர் மேயர் தேர்தலில் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதா? தடை கேட்டு கோர்ட் படியேறுகிறது பாஜக
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் கவுன்சிலர்கள் மட்டுமல்லாது எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்ய உள்ளது.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் பாஜகவும், 76 இடங்களில் காங்கிரசும், 14 இடங்களில் ம.ஜ.தவும் வென்றன. சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றிக்கொடி நாட்டினர். அதில், ஒரு சுயேச்சை பிற்பாடு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், மேயர் பதவியை தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பெங்களூர் நகர தொகுதிகளை சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள், மற்றும் மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த தலா 3 எம்.பிக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாகும்.
கடந்த முறை நடந்த மேயர் தேர்தலின்போது, மேயரை தேர்ந்தெடுக்க 128 வாக்குகள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் இம்முறை, எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அது 131 வாக்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அனைத்தையும் கூட்டினாலும் பாஜகவிடம் இருப்பது 126 வாக்குகள்தான்.
காங்கிரசிடம் 101 வாக்குகளும், ம.ஜ.தவிடம் 21 வாக்குகளும் உள்ளன. ஏற்கனவே சுயேச்சைகளில் ஒருவர் பாஜகவில் இணைந்துவிட்டார். எனவே இன்னும் எஞ்சியுள்ள 7 சுயேச்சைகளையும் தன்பக்கம் இழுக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாஜக உள்ளது. குறைந்தது 5 சுயேச்சைகளையாவது இழுக்க வேண்டும்.
இந்நிலையில், கவுன்சிலர்களை தவிர்த்த பிற உறுப்பினர்கள் மாநகராட்சியில் வாக்களிக்கும் நடைமுறையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் பாஜக வழக்கு தொடுக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பசவகல்யாண் நகராட்சியில் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க தடை விதித்து சமீபத்தில் ஹைகோர்ட் உத்தரவிட்டதை முன்மாதிரியாக கொண்டு பாஜகவும் வாதிட திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற தடை கிடைத்தால் மேயர் வேட்பாளரைவவ வெற்றிபெறச் செய்ய 100 வாக்குகளே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது











Click it and Unblock the Notifications