டோணிக்கு இந்த கதியா? அதிருப்தியில் ரசிகர்கள்
Recommended Video
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செய்துள்ள இந்த ஒரு செயல், டோணி ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
2017-18ம் ஆண்டுக்கான, ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதுவரை ஏ, பி, சி என மூன்று பிரிவுகளின்கீழ் வீரர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாண்டு புதிதாக A+ என்ற ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு, அதில் 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரோகித்துக்கு ஏ பிளஸ்சாம்
இந்த பிரிவில் கேப்டன் விராட் கோஹ்லி, ஷிகர் தவான், ஃபார்மிலேயே இல்லாத ரோகித் ஷர்மா, பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகிய ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், முன்னணி வீரர் டோணிக்கு அந்த இடம் வழங்கப்படவில்லை. ஏ பிளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடி வழங்கப்படும்.
ஊதிய உயர்வு
டோணி ஏ பிரிவில் தொடருகிறார். ஜடேஜா, அஸ்வின், புஜாரா, முரளி விஜய், ரஹானே, விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா உள்ளிட்டோர் ஏ பிரிவில் உள்ள பிற வீரர்களாகும். இதில் சாஹாவுக்கு பி பிரிவில் இருந்து புரமோஷன் கொடுத்து ஏ பிரிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகும். முன்பு இந்த பிரிவுக்கு ஊதியமாக ரூ.2 கோடி வழங்கப்பட்டு வந்தது.
பவுலர்கள்
ஹர்திக் பாண்ட்யா, சஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியமாகும். ஊதியங்களை உயர்த்தியுள்ளபோதிலும், டோணிக்கு ரோகித் ஷர்மா, தவான் போன்றோர் இடம் பெற்றுள்ள பிரிவில் கூட இடம் கொடுக்காதது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டோணிக்கு இந்த நிலையா
டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை போட்டிகளிலும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியவரும், உலக அளவில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவருமான டோணி 2வது கட்ட பிரிவில் வைக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே 26 பேர் கொண்ட இந்த ஒப்பந்த பட்டியலில், முகமது ஷமி பெயர் சேர்க்கப்படவில்லை. அவரது மனைவி ஷமி பற்றி சில புகார்களை பகிரங்கமாக கூறிய நிலையில், இந்த முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளதாக தெரிகிறது.