72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் திலீப் கோஷ், மூவர்ணக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதேபோல நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகளில் நடைபெறவிருந்த குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்கத்திலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட, மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் திலீப் கோஷ், தேசிய கொடியை ஏற்றினார். ஆனால், இந்தக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது.
தவறை உணர்ந்த திலீப் கோஷ், உடனடியாக மூவர்ணக் கொடியை கீழே இறக்கினார். சரி செய்யப்பட்ட பின், மீண்டும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்றும் கவனக்குறைவு காரணமாக இந்தத் தவறு நடந்துவிட்டதாகவும் திலீப் கோஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாஜக தலைவர் திலீப் கோஷின் இந்த செயலை மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரினாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. தேசியக் கொடியை முறையாக ஏற்ற முடியாதவர்கள் இந்த நாட்டையோ அல்லது ஒரு மாநிலத்தையோ ஆளத் தகுதியற்றவர்கள் என்று விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications