திடீர் பவர் கட்.. ஸ்ட்ராங் ரூமுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்! மேற்கு வங்கத்தில் உச்சக்கட்ட பதற்றம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முன்னதாக நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமுக்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹூக்ளியின் ஸ்ரீராம்பூர், நாடியாவின் கிருஷ்ணாநகர், வர்த்தமானின் அவுஷ்கிராம் மற்றும் கொல்கத்தாவின் சில பகுதிகளில் திட்டமிட்டு மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மின்தடையைப் பயன்படுத்தி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்படுவதாகவும், அங்கு மர்ம வாகனங்கள் வந்து செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"நானே விடிய விடிய விழித்திருந்து கண்காணிப்பது போல, நீங்களும் உறங்காமல் ஸ்ட்ராங் ரூம்களைக் காவல் காக்க வேண்டும். சந்தேகம் வந்தால் புகார் அளிப்பதோடு, சிசிடிவி காட்சிகளைக் கேட்டுப் போராடுங்கள்" எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மின்வெட்டுக்கு பாஜக தான் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
இரு கட்டத் தேர்தல்: ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை: இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
மெஜாரிட்டி மார்க்: மொத்தம் 294 இடங்கள் இருந்தாலும், 'பல்டா' தொகுதியில் மறுவாக்குப்பதிவு உத்தரவிடப்பட்டுள்ளதால், இன்று 293 இடங்களுக்கு மட்டுமே முடிவுகள் வெளியாகும். (பல்டா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 21-ல் நடைபெறும்). ஆட்சியமைக்க 148 இடங்கள் தேவை.
மம்தாவின் நம்பிக்கை vs கருத்துக்கணிப்புகள்
மம்தாவின் இலக்கு: 2011 முதல் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா, இம்முறை தனது கட்சி 226 முதல் 230 இடங்கள் வரை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெறும் எனத் தீர்க்கமாக நம்புகிறார்.
எக்சிட் போல் கணிப்பு: இதற்கு நேர்மாறாக, 5 முக்கிய எக்சிட் போல் கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. இதுவே மம்தாவின் இந்த நள்ளிரவு பதற்றத்திற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications