பெங்களூரில் பரபரப்பு.. தமிழக தம்பதியை குத்தி கொன்ற பேரன்.. கூட்டாளியை சுட்டு பிடித்தது போலீஸ்
Recommended Video

பெங்களூர்: பெங்களூரை உலுக்கிய வயதான தம்பதிகள் கொலை வழக்கில் திருப்பமாக, அவர்களின் சொந்த பேரன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் தப்பியோட முயன்றபோது போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டான்.
பெங்களூர், எச்.ஏ.எல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, மாரத்தஹள்ளி, அஷ்வத்நகரில் வசித்து வந்தவர் கோவிந்தன் (65). பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட்டில் (பெல்) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜா (60). இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், உஷா என்ற மகளும் உண்டு.
இதில் ஒரு மகன் சில வருடங்கள் முன்பு இறந்துவிட்டார். உஷா, அருகேயுள்ள எச்.ஏ.எல் லேஅவுட் பகுதியில் வசித்து வந்தார்.

காஸ் வாடை வீசியது
தம்பதிகள், சொந்த வீட்டின் கீழ்தளத்தில் வசித்தனர். முதல் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தனர். இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம் முதல், தம்பதிகள் வசித்த வீடு பூட்டியே கிடந்தது. நேற்று அந்த வீட்டிலிருந்து காஸ் வாடை அதிகம் வீசியது. அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள், இதுகுறித்து உஷாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் நேற்று இரவு வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே, கோவிந்தன் மற்றும் சரோஜா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

கத்தியால் குத்தி கொலை
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தியபோது, தம்பதிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து தீவிர விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு, இது சொந்த தகராறு காரணமாக நடைபெற்ற கொலையாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து உஷா கொடுத்த சில தகவல்கள் அடிப்படையில், தம்பதிகளின் பேரன்களில் ஒருவனான பிரமோத்திடம் விசாரணை நடத்தினர் போலீசார்.

சிக்கிய பேரன்
விசாரணையில் அவன் தனது நண்பர்கள், பிரவீன் மற்றும் ஹசன் பாஷா ஆகியோருடன் சேர்ந்து இக்கொலையை செய்ததை ஒப்புக்கொண்டான். மேலும், காஸ் சிலிண்டரை திறந்துவிட்டு வீட்டையே தீக்கிரையாக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்தான். இதையடுத்து பிரவீனை கைது செய்த போலீசார், ஹசன் பாஷாவை தேடி வந்தனர். ஹசன் பாஷா, எச்.ஏ.எல் பகுதியையடுத்த எமலூர் என்ற இடத்தில் இருப்பதை அறிந்த போலீசார் இன்று மதியம் அவனை சுற்றி வளைத்தனர்.

சுட்டு பிடித்த போலீஸ்
போலீசாரை பார்த்த கொலையாளி, கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றான். இதைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பிரஷீல் தன்னிடமிருந்த துப்பாக்கியால் தற்காப்புக்காக ஹசன்பாஷா காலை நோக்கி சுட்டார். காலில் குண்டு பாய்ந்து சரிந்த ஹசன் பாஷாவை கைது செய்த போலீசார், தாக்குதலுக்குள்ளான கான்ஸ்டபிள் மற்றும் ஹசன்பாஷாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தம்பதிகள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications