ஆர்எஸ்எஸ் பிரமுகர் வெட்டிக் கொலை.. பெங்களூரின் சிவாஜிநகர் பகுதியில் இன்று பந்த்
பெங்களூர்: ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையை தொடர்ந்து பெங்களூரின், சிவாஜிநகர் பகுதியில் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிவாஜிநகர் மண்டல் தலைவரும், அப்பகுதி பாஜக செயலாளருமான ருத்ரேஷ் நேற்று காலை நண்பர்களுடன் கடைத்தெருவில் பேசிக்கொண்டிருந்தபோது வெட்டி கொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த இருவர் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பியோடினர். அருகேயிருந்தவர்கள் அவரை, மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

கொலையாவதற்கு சற்றுமுன்புதான், சிவாஜிநகர் அருகேயுள்ள மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், ருத்ரேஷ் பங்கேற்று திரும்பியிருந்தார்.
இக்கொலையை கண்டித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர், கமர்சியல் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தின் முன்பு தர்ணா நடத்தியதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பெரும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ருத்ரேஷ் கொலையை கண்டித்து, இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அழைப்புவிடுத்திருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. இதனால் அங்கு கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கமர்சியல் தெரு, சிவாஜிநகர், பாரதி நகர் மற்றும் பிரேசர் டவுன் ஆகிய அக்கம்பக்கத்து 4 காவல் சரகங்களிலும் இன்று 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சரகங்கள் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என்பதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications