பெங்களூர் பெண் மானபங்க வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது
பெங்களூர்: பெங்களூரில் பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பெங்களூர் கம்மனஹள்ளி பகுதியில் ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற இளம் பெண்ணை ஸ்கூட்டரில் வந்த இரு வாலிபர்கள் சேர்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிசிடிவியொன்றில் பதிவாகி அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் லீனோ என்ற லெனின் பேட்ரிக் மற்றும் ஐயப்பா ஆகியோரும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக சுதி என்ற சதேஷ் மற்றும் சின்னி என்ற சோமசேகர் ஆகிய இருவரும் என மொத்தம், 4 பேரை போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது 21 வயதாகும் ஜேம்ஸ் என்ற மற்றொரு கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கபானசவாடி பகுதியில் வசிக்கும் இவர், ராமமூர்த்தி நகர் பகுதியில் தலைமறைவாக இருந்தபோது போலீசில் பிடிபட்டார். மற்றொரு கூட்டாளியான பப்பி இன்னும் தலைமறைவாக உள்ளார்.
இதில் லீனோதான், அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளார். ஸ்கூட்டரில் அமர்ந்திருந்து அவருக்கு உதவி செய்தது ஐயப்பா. சற்று தூரத்தில் இறு பைக்குகளில் மற்ற நான்கு நண்பர்களும் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட செயல் என கூறப்படுகிறது. எனவே ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.