காவிரி வழக்கு: முன்கூட்டியே குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிய பெங்களூர் பள்ளிகள்
பெங்களூர்: காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளதால் பெங்களூர் பள்ளி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கையாக, குழந்தைகளை முன்கூட்டியே வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோருக்கு தகவல் கொடுத்து வருகின்றன.
கடந்த 12ம் தேதி காவிரி பங்கீடு தொடர்பான கர்நாடக அரசின் சீராய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், வரும் 20ம் தேதிவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அன்று பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் அதே வழக்கின் தொடர்ச்சி இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதால் நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர். பலரும் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. ஆபீஸ் செல்வோரும் அதை தவிர்த்தனர். ஐடி நிறுவன பணியாளர்கள் பலரும் வீட்டில் இருந்தபடி வேலை பார்க்க அனுமதி பெற்றனர்.
இந்நிலையில், பிற்பகலில் காவிரி விவகாரம் விசாரணைக்கு வர உள்ளதால், முன்கூட்டியே பல பள்ளிகள் வகுப்பு நேரத்தை முடித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து எஸ்.எம்.எஸ் மூலம், பெற்றோருக்கு பள்ளி, நிர்வாகங்கள் தகவல் கூறியுள்ளன. பள்ளி வேன்கள் முன்கூட்டியே கிளம்பும் என்றும், அதற்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டுமானால், பெற்றோரே நேரடியாக வந்து அழைத்து செல்லலாம் என்றும், எஸ்எம்எஸ்சில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தியடித்து தங்கள் குழந்தைகளை பெற்றோர் அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications