பெங்களூரு முழுவதும் வளைத்து வளைத்து வைஃபை... மாநில அரசு திட்டம்!
பெங்களூரு: நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூருவின் அனைத்து பகுதிகளிலும் இலவச வைஃபை வசதி அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு நகரின் எம்ஜிரோடு, சாந்திநகர் பஸ் நிலையம், சிட்டி ரயில் நிலையம் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதை நகரம் முழுமைக்கும் விரிவுபடுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் இலவச வைஃபை தரப்படும் என்று ஆம் ஆத்மி தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த நிலையில் பெங்களூருவுக்கு ஏன் அப்படி ஒரு சேவையை வழங்க முடியாது என்ற எண்ணம் தோன்றியதாகவும், அது செயல்வடிவம் பெற உள்ளதாகவும் கூறுகிறார், கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா.
மேலும், அவர் கூறுகையில், டெல்லியில் செய்ய முடிந்தால் ஏன் பெங்களூருவிலும் செய்ய முடியாது என்ற ஆதங்கத்தில், நான் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து இந்த யோசனையை தெரிவித்தேன். அவரும், இந்த திட்டத்தை கேட்டு வரவேற்பு தெரிவித்தார். உடனடியாக நந்தன் நீல்கனியை வைத்து வேலையை ஆரம்பிக்கலாம் என்றும் கூறினார். பெங்களூருவில் குவிந்துள்ள ஐடி நிறுவனங்களின் பங்களிப்பை அரசு நாடும் என்று தெரிகிறது. இவ்வாறு கல்லப்பா கூறினார்.
நகரம் முழுமைக்கும் இலவச இணையதள வசதி அளிக்க அரசுக்கு சுமார் 200 கோடிவரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications