பெங்களூர்-ஒசூர் மேம்பாலத்தில் 140 கி.மீ வேகத்தில் பள்ளி மாணவர்கள் கார் ரேஸ்: மாணவன் தலை துண்டானது
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் தந்தையின் காரை எடுத்துக்கொண்டு மேம்பாலத்தில் ரேஸ் நடத்தியபோது விபத்தில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்கள் இருவரின் மகன்களும், தொழிலதிபர் ஒருவரின் மகனும் அடிக்கடி இரவு நேரத்தில் தங்கள் தந்தை கார்களை எடுத்துக்கொண்டு ஒசூர் சாலையிலுள்ள 9 கி.மீ நீள மேம்பாலத்தில் ரேஸ் நடத்துவது வழக்கமாம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மூவரும் ஸ்கோடா, டிசையர், இன்னோவா ஆகிய கார்களில் ஜாலி ரெய்டுக்கு போயுள்ளனர்.
நள்ளிரவில் தொடர் ரேஸ்
நள்ளிரவு 1 மணி முதல் தொடர்ந்து அந்த பாலத்தில் சுமார் 10 முறை அங்குமிங்கும் வேகமாக காரை ஓட்டி ரேஸ் நடத்தியுள்ளனர். மூவரும் மடிவாளா நோக்கி வேகமாக காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது, மூவருமே முதலில் யார் பாலத்தை கடப்பது என்பதில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியுள்ளனர். சுமார் 140 கி.மீ வேகத்தில் கார்கள் சீறியுள்ளன.
உரசிய கார்கள்
பாலம் முடிவடையும் தருவாயில் 3 கார்களும் ஒன்றோடு ஒன்று உரசியுள்ளன. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கோடா கார், இடதுபக்க சாலைதடுப்பில் மோதி கவிழ்ந்தது. அந்த காரை ஓட்டிய பள்ளி மாணவரின் தலை துண்டாகி அதே இடத்தில் அவன் உயிரிழந்தான்.
எதிரே சென்று மோதிய இன்னோவா
இன்னோவா கார், வலதுபக்கத்திலுள்ள 2 அடி உயர சாலை பிரிவில் ஏறி, எதிரே சென்ற மினி பால் லாரி மீது மோதியுள்ளது. இதில் அந்த மினி லாரி கவிழ்ந்தது. இருப்பினும் அதிருஷ்டவசமாக இன்னோவாவை ஓட்டிய சிறுவன் காயமின்றி தப்பினான். லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்தோடு தப்பினர்.
|
அதிரடி கைது
தகவல் அறிந்த போலீசார், உயிரோடு தப்பிய 2 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். அதேபோல, சிறுவர்களிடம் காரை கொடுத்து மெத்தனமாக இருந்ததற்காக மூன்று சிறுவர்களின் தந்தைகளையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து மடிவாளா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.