பிறந்த நாள் பார்ட்டி பில்லை செலுத்தும் தகராறில் அண்ணனை கொன்ற தம்பி!
பெங்களூர்: பிறந்த நாள் பார்ட்டிக்கான செலவை செட்டில் செய்த விவகாரத்தில் சண்டை ஏற்பட்டு, அண்ணனை தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் இந்திராநகரை சேர்ந்தவரான ஆலன் ஜெரால்ட் (27), கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். இவரது தம்பி சந்தோஷ் அந்தோணி, பெங்களூர் மெட்ரோ ரயில் கார்பொரேசன் நிறுவன கோச் தயாரிப்பு பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று, தங்கள் சகோதரி ஜூலியின் பிறந்த நாளையொட்டி, ரிச்மண்ட் டவுன் பகுதியிலுள்ள ஒரு 'பப்'புக்கு பார்ட்டி கொண்டாட இவர்கள் சென்றுள்ளனர். உறவுக்காரர்கள் சிலரும் உடன் சென்றுள்ளனர். இரவு 9.45 மணிக்கு பார்ட்டியை தொடங்கிய இவர்கள், 11.15 மணிக்கு, வெளியே வந்துள்ளனர்.
அப்போது பார்ட்டிக்கான ஹோட்டல் செலவை, கசின் பிரதர் ஒருவர் செலுத்திவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும், நீ ஏன் பணம் கொடுக்கவில்லை என்று ஆலன் ஜெரால்டிடம், சந்தோஷ் வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும் கசின் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால் ஆட்டோவிலும், அண்ணனுடன் சண்டை போட்டுள்ளார் சந்தோஷ்.
கோபமடைந்த ஆட்டோ டிரைவர் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டாராம். இதனால் சந்தோஷுக்கு கோபம் உச்சிக்கு சென்றது. அண்ணனை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் பிளாட்பாரத்தில் விழுந்த ஜெரால்ட் பரிதாபமாக உயிரிழந்தார். கசின் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.