வசுந்தர ராஜே 'ராஜ்ஜிய'த்துக்கு முடிவுரை- ராஜஸ்தான் பாஜக முதல்வராக பஜன் லால் சர்மா பதவியேற்றார்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வராக இன்று பஜன் லால் சர்மா பதவியேற்றார். பஜன் லால் சர்மா பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 25-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

வசுந்தர ராஜே சிந்தியா சகாப்தம் முடிவு: ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே அம்மாநில முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்தது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் மற்றொரு ராஜஸ்தான் மகாராணி தியா குமாரியும் களத்தில் நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பிடிப்புள்ள பஜன் லால் சர்மா, மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வசுந்த ராஜே சிந்தியா அதிர்ச்சியில் உறைந்தார். ராஜஸ்தான் மாநில பாஜக முகமாக இருந்த வசுந்த ராஜே சிந்தியாவின் சகாப்தத்துக்கு பாஜக மேலிடமே முடிவுரை எழுதிவிட்டது.

ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்பு: இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் சர்மா இன்று பதவியேற்றார். பஜன் லால் சர்மாவுடன் தியா குமாரி, பிரேம்சந்த் பைரவா இருவரும் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யார் இந்த பஜன் லால் சர்மா?: ராஜஸ்தான் சட்டசபைக்கு முதல் முறை எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருப்பவர் பஜன் லால் சர்மா. Sanganer தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவர். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றான பரத்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். தற்போது பாஜகவின் ராஜஸ்தான் மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.
மாநில முதல்வர்கள்: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சகா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்கள் வசுந்தர ராஜே சிந்தியா, அசோக் கெலாட், மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், நிதின் கட்காரி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications