பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது.. தாக்குதல் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அமித்ஷா ஆவேசம்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று அமித்ஷா ஆய்வு செய்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என்றும், குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் ஆவேசமாக கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒட்டு மொத்த தேசத்தையே அதிரவைத்துள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் மலைப் பாங்கான பள்ளத்தாக்கு மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஊராகும்.

அமித்ஷா நேரில் ஆய்வு
மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இந்த இடம் கண்ணுக்கு விருந்தளிக்கக் கூடிய வகையில் காணும் இடமெல்லாம் பச்சை பசேல் என இருக்கும். இந்த அழகிய இயற்கை சூழல் மிகுந்த இடத்தில்தால் பயங்கரவாதிகள் வெறியாட்டம் நடத்தி 26 பயணிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் புறப்பட்டு சென்றார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று தாக்குதல் நடந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த அமித்ஷா அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் தாக்குதல் எப்படி நடைபெற்றது என்பது குறித்து கேட்டறிந்தார்.
குற்றவாளிகள் தப்ப முடியாது
பின்னர் தனது எக்ஸ் பதிவில் அமித்ஷா கூறியதாவது:- "பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன். பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணிந்து போகாது. இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது" எண்று பதிவிட்டுள்ளார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினரை சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார். மேலும் காயம் அடைந்தவர்களிடமும் நலம் விசரித்தார்.
தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகில் பரந்து விரிந்த காடுகள் உள்ளன. எனவே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அந்த காடுகள் வழியாக மறைந்து பதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. பஹல்காமில் தற்போது தேசிய புலனாய்வு முகமை முகாமிட்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications