பாவனாவைக் கடத்தி, பலாத்காரம் செய்த பல்சர் சுனி கைது!
கொச்சி: கேரளத்தில் நடிகை பாவனாவைக் காரில் கடத்தி துன்புறுத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியைக் கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா சில தினங்களுக்கு முன் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தக் காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் கடத்தல் கும்பல் பதிவு செய்துள்ளது.

இந்த மோசமான சம்பவம் குறித்து பாவனா அளித்த புகாரின்பேரில் தீவிரமாக நடவடிக்கை எடுத்தனர் போலீசார்.
விசாரணையில், பாவனா துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கோவையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் கேரள தனிப்படை ஐ.ஜி. தினேஷ் காஷ்யப் உத்தரவின் பேரில், எர்ணாகுளம் ரூரல் எஸ்.பி. சி.விக்ரம் தலைமையிலான காவல் துறையினர் கோவை வந்தனர். பின்னர், கோவையில் பதுங்கி இருந்த இருவரைக் கைது செய்தனர். அவர்கள், ஆலப்புழையைச் சேர்ந்த சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், மலையாள நடிகர்-நடிகையர்களிடம் முன்பு கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த பல்சர் சுனி என்பவர் உள்பட மேலும் 6 பேருக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். திங்கள் இரவு, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மணிகண்டனைப் பாலக்காடு காவல்துறை கைது செய்தது.
பல்சர் சுனி, விஜீஸ் ஆகிய 2 பேரும், வழக்கறிஞர் பவுலோஸ் மூலம் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்கள். ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் அளித்தால் பாவனா விவகாரம் குறித்த விசாரணை பாதிக்கப்படும் என்பதால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் கூறியது.
இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவரைக் கைது செய்வதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக போலீஸார் கடும் விமர்சனத்துக்குள்ளாகினர். இந்த நிலையில், இந்நிலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான பல்சர் சுனி, விஜீஸ் ஆகிய இருவரையும் எர்ணாகுளத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.












Click it and Unblock the Notifications