பாவனா விவகாரம்: கேரள சட்டசபையில் அமளி, வெளிநடப்பு
திருவனந்தபுரம்: நடிகை பாவனா விவகாரத்தால் கேரள சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னால் எந்த சதியும் இல்லை என்று கேரள முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்தார். நேற்று சட்டசபை கூடியபோது பாவனா விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பியது.
வழக்கு விசாரணையை பலம் இழக்கச் செய்யும் வகையில் உள்ளது முதல்வரின் கருத்து என்று காங்கிரஸ் தெரிவித்தது. இது குறித்து பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் பி.டி.தாமஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பாவனா கடத்தலுக்கு பின்னால் உள்ள பெரும்புள்ளிகளை சட்டத்தின் முன்பு கொண்டு வர வேண்டும் என்றார்.
எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது முதல்வர் இப்படி கூறியது விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது போன்று உள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது அதை முடித்து வைக்க முதல்வருக்கு என்ன உரிமை உள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
பாவனா வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் போலீசார் விரைந்து கைது செய்ததில் இருந்தே அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது புரியும். எதிர்கட்சி தேவையில்லாமல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று முதல்வர் பதில் அளித்தார்.
முதல்வரின் பதிலால் அதிருப்தி அடைந்த எதிர்கட்சியினர் சபையின் நடுவே வந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.
அரை மணிநேரம் கழித்து சடை மீண்டும் கூடியபோது பாவனா விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications